thevaram

திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள்




பாம்பு விடத்தால் இறந்த மூத்த திருநாவுக்கரசை உயிர்ப்பித்த அற்புதத்தைக் கூறும் திருப்பதிகம்.




 
                                 திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள்
  
  திருமுறை - நான்காம் திருமுறை - பொதுப்பதிகம்
  பண் - இந்தளம்
  
ஒன்றுகொ லாமவர்
  சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய
  ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு
  வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவர்
  ஊர்வது தானே.  1 


இரண்டுகொ லாமிமை
  யோர்தொழு பாதம்
இரண்டுகொ லாமிலங்
  குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு
  வஞ்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவர்
  எய்தின தாமே.  2 


மூன்றுகொ லாமவர்
  கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர்
  சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை
  கையது வில்நாண்
மூன்றுகொ லாம்புர
  மெய்தன தாமே.  3 


நாலுகொ லாமவர்
  தம்முக மாவன
நாலுகொ லாஞ்சன
  னம்முதற் றோற்றமும்
நாலுகொ லாமவர்
  ஊர்தியின் பாதங்கள்
நாலுகொ லாமறை
  பாடின தாமே.  4 


அஞ்சுகொ லாமவர்
  ஆடர வின்படம்
அஞ்சுகொ லாமவர்
  வெல்புல னாவன
அஞ்சுகொ லாமவர்
  காயப்பட் டான்கணை
அஞ்சுகொ லாமவர்
  ஆடின தாமே.  5 


ஆறுகொ லாமவர்
  அங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர்
  தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர்
  தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை
  யாக்கின தாமே.  6 


ஏழுகொ லாமவர்
  ஊழி படைத்தன
ஏழுகொ லாமவர்
  கண்ட இருங்கடல்
ஏழுகொ லாமவர்
  ஆளு முலகங்கள்
ஏழுகொ லாமிசை
  யாக்கின தாமே.  7 


எட்டுக்கொ லாமவர்
  ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாமவர்
  சூடு மினமலர்
எட்டுக்கொ லாமவர்
  தோளிணை யாவன
எட்டுக்கொ லாந்திசை
  யாக்கின தாமே.  8 


ஒன்பது போலவர்
  வாசல் வகுத்தன
ஒன்பது போலவர்
  மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர்
  கோலக் குழற்சடை
ஒன்பது போலவர்
  பாரிடந் தானே.  9 


பத்துக்கொ லாமவர்
  பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி
  றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர்
  காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி
  யார்செய்கை தானே. 10